வாய்ச்சவடால் விடுவதை விடுத்து முடிந்தால் தேர்தலை நடத்துங்கள்!

“தேசிய மக்கள் சக்தி அரசு மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து வாய்ச்சவடால் விடுவதை விடுத்து, உடனடியாகத் தேர்தலுக்கான திகதியை அறிவிக்க வேண்டும்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.

மாகாண சபைத் தேர்தலில் வடக்கு, கிழக்கு உட்பட அனைத்து மாகாணங்களிலும் ஆளுங்கட்சி வெற்றி பெறும் என்று பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா வெளியிட்ட கருத்துக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மக்கள்
செல்வாக்கு
சரிந்துவிட்டது

இது குறித்து கயந்த கருணாதிலக எம்.பி. ஊடகங்களிடம் மேலும் கூறுகையில்:-

“அரசு ஆட்சிக்கு வந்து குறுகிய காலத்துக்குள்ளேயே மக்கள் மத்தியில் அதன் செல்வாக்கு சரிந்துவிட்டது. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் பொருளாதார நெருக்கடிகளால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இந்தநிலையில் வடக்கு, கிழக்கில் வெற்றி பெறுவோம் என்று கூறுவது வெறும் பகற்கனவு மாத்திரமே.

தேர்தலை
தள்ளிப்போட
வேண்டாம்

தேசிய மக்கள் சக்திக்கு உண்மையாகவே மக்கள் செல்வாக்கு இருந்தால், தேர்தலை நடத்த ஏன் அஞ்ச வேண்டும்? உரிய காலப்பகுதிக்குள் தேர்தலை நடத்துவோம் என்று இழுத்தடிப்புச் செய்யாமல், உடனடியாக ஜனநாயக ரீதியாகத் தேர்தலை நடத்தி மக்கள் யாருக்கு ஆதரவு வழங்குகிறார்கள் என்பதைப் பார்க்குமாறு சவால் விடுகின்றோம். சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி மாகாண சபைத் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகவே உள்ளது.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.