ஜனநாயகத்தை முடக்கியவர்களுக்கு தேர்தல் பற்றிப் பேச அருகதை இல்லை – அமைச்சர் வசந்த சமரசிங்க காட்டம்.
“மாகாண சபைத் தேர்தலை உரிய காலத்தில் நடத்தாமல் நீண்டகாலமாகத் தடுத்து நிறுத்தியவர்களே இன்று தேர்தலை நடத்துமாறு சவால் விடுவது வேடிக்கையானது.” – என்று தேசிய மக்கள் சக்தியின் அமைச்சர்களில் ஒருவரான வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
அரசின் மக்கள் செல்வாக்கைப் பரிசோதிக்கத் தேர்தலை நடத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன விடுத்த சவாலுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது குறித்து ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்:-
“கடந்த காலங்களில் மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் தள்ளிப்போட்டு, ஜனநாயகத்தை முடக்கியவர்கள் யார் என்பது நாட்டு மக்களுக்குத் தெரியும். ரோஹித அபேகுணவர்தன போன்றவர்கள் அன்று அதிகாரத்தில் இருந்தபோது தேர்தலைப் பற்றிப் பேசவில்லை. இன்று தமக்கு மக்கள் செல்வாக்கு இருப்பதாகக் காட்டிக்கொள்ள முற்படுவது நகைப்புக்குரியது.
அரசு தற்போது கடந்த கால ஆட்சியாளர்களால் ஏற்படுத்தப்பட்ட சீரழிவுகளையும், பொருளாதாரக் குழப்பங்களையும் சரிசெய்து கொண்டிருக்கின்றது. தேர்தலை நடத்துவதில் எங்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை. உரிய நடைமுறைகள் மற்றும் சட்டச் சிக்கல்கள் தீர்க்கப்பட்ட பின்னர், மாகாண சபைத் தேர்தல் நிச்சயமாக நடத்தப்படும். அப்போது மக்கள் யாருக்குப் பாடம் புகட்டுவார்கள் என்பதை ரோஹித போன்றவர்கள் நேரில் பார்ப்பார்கள்.” – என்று அவர் காரசாரமாகப் பதிலளித்தார்.
தேசிய மக்கள் சக்தியின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை தேர்தல்களின் போது நிரூபிக்கப்படும் என்றும், இவ்வாறான ‘வாய்ச்சவடால்களுக்கு’ அஞ்சப் போவதில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
