பஸ்ஸுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: நண்பனைப் பார்க்கச் சென்ற இளைஞர் பரிதாப உயிரிழப்பு! – மேலும் இருவர் கவலைக்கிடம்.

காலி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் 24 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த விபத்தில் காலி – கிந்தோட்டை பகுதியைச் சேர்ந்த இளைஞரே உயிரிழந்துள்ளார்.

இரத்கம, பிந்தாலிய சந்தியில் இடம்பெற்ற மற்றுமொரு விபத்தில் சிக்கிய தனது நண்பர்கள் இருவரைப் பார்ப்பதற்காகக் காலி போதனா வைத்தியசாலைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இரத்கம பகுதியில் இடம்பெற்ற அந்த முந்தைய விபத்திலும் ஒரு இளைஞர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த விபத்தில் கிந்தோட்டை மற்றும் தத்தல்ல பகுதிகளைச் சேர்ந்த 18 வயதுடைய இரு இளைஞர்கள் பலத்த காயமடைந்துள்ளனர். அவர்கள் இருவரும் தற்போது காலி போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைக் காலி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

நண்பனின் விபத்துச் செய்தி கேட்டு விரைந்தவர்கள், அதே வைத்தியசாலைக்குச் செல்லும் வழியில் விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.