மாகாண சபைத் தேர்தலை பழைய முறையில் நடத்துக! – விசேட குழுவிடம் முன்மொழிவைச் சமர்ப்பிக்க எதிர்க்கட்சி முடிவு.

நீண்டகாலமாக முடங்கிக் கிடக்கும் மாகாண சபைத் தேர்தலை பழைய தேர்தல் முறையிலேயே மிக விரைவாக நடத்துவதற்குத் தேவையான யோசனைகளை நாடாளுமன்ற விசேட குழுவிடம் சமர்ப்பிக்க எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன.

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற விசேட குழுவின் முதலாவது அமர்விலேயே இந்த முன்மொழிவைச் சமர்ப்பிக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

நாடாளுமன்றத்தில் ஒரு சிறிய திருத்தத்தை எளிய பெரும்பான்மையுடன் நிறைவேற்றுவதன் மூலம், பழைய தேர்தல் முறையிலேயே தேர்தலை உடனடியாக நடத்த முடியும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. தெரிவித்துள்ளார்.

நடப்பு ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் மாகாண சபைத் தேர்தலுக்கான நிதியை அரசு ஏற்கனவே ஒதுக்கியுள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசுக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் உள்ளதால், தேர்தலுக்கான சட்டப் பின்னணியை உருவாக்குவது இலகுவானது என்றும், அதற்கு எதிர்க்கட்சி முழுமையான ஆதரவை வழங்கும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக மாகாண சபைகள் மக்கள் பிரதிநிதிகள் இன்றி முடங்கிக் கிடப்பதால் அத்தியாவசிய சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் ரஞ்சித் மத்தும பண்டார கவலை வெளியிட்டுள்ளார்.

தேர்தலை நடத்துவதில் அரசுக்கு உண்மையான விருப்பம் இருந்தால், காலதாமதமின்றி அதனை முன்னெடுக்க முடியும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மாகாண சபைத் தேர்தல் குறித்து ஆராய நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற விசேட குழு, இந்த விவகாரத்துக்கு விரைவான தீர்வை வழங்க வேண்டும் என்பதே எதிர்க்கட்சியின் பிரதான கோரிக்கையாக அமைந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.