எரிபொருள் நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசை! தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை; தாராளமாக உள்ளது என்று அரசு அறிவிப்பு.

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலால் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில், நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நேற்று மாலை முதல் இரவு வரை மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்தமையை அவதானிக்க முடிந்தது. எனினும், இத்தகைய அச்சம் தேவையற்றது என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இது குறித்து கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா ஊடகங்களுக்கு வழங்கிய விசேட விளக்கத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

போதுமான கையிருப்பு

“இலங்கையில் தற்போதுள்ள கையிருப்பு மற்றும் அடுத்தடுத்து நாட்டை வந்தடையவுள்ள எரிபொருள் கப்பல்களின் விவரங்களின்படி, எவ்விதத் தடையுமின்றி விநியோகத்தை முன்னெடுக்க முடியும்.

குறிப்பாக பெற்றோல் இன்னும் 37 நாள்களுக்குப் போதுமான அளவு கையிருப்பில் உள்ளது.

ஒட்டோ டீசல் இன்னும் 35 நாள்களுக்குப் போதுமான அளவு உள்ளது.

விமான எரிபொருள் இன்னும் 47 நாள்களுக்குப் போதுமான அளவு சேமிப்பில் உள்ளது.

இறக்குமதியில்
பாதிப்பில்லை

இலங்கைக்குத் தேவையான சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் (பெற்றோல், டீசல்) பெரும்பாலும் இந்தியா, சிங்கப்பூர், கொரியா மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன. எனவே, மத்திய கிழக்கில் உள்ள ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டாலும் கூட, எமது இறக்குமதிக்கு அது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது.

மசகு எண்ணெய்
நிலைவரம்

மசகு எண்ணெய் இறக்குமதிக்கு மாத்திரமே சிறிய பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இருப்பினும், தற்போது எம்மிடம் உள்ள மசகு எண்ணெய் கையிருப்பு ஒரு மாத காலத்துக்கு முழுமையாகப் போதுமானது. எனவே, பொதுமக்களோ அல்லது வாகன சாரதிகளோ தேவையற்ற முறையில் கலக்கமடைய வேண்டாம்.” – என்றார்.

மக்களிடம்
வேண்டுகோள்

ஒரு கப்பல் கூட வராவிட்டாலும் கூட, குறிப்பிட்ட காலத்துக்குத் தடையின்றி விநியோகம் செய்ய முடியும் என உறுதிபடத் தெரிவித்துள்ள அவர், மக்கள் தேவையற்ற முறையில் எரிபொருளைச் சேமிக்க முற்பட வேண்டாம் என்றும், அத்தகைய பதற்றமே தேவையற்ற நெருக்கடிகளை உருவாக்கும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.