கொழும்பில் வழமைக்குத் திரும்பிய எரிபொருள் விநியோக நடவடிக்கை – நீண்ட வரிசைகள் மறைந்தன.

கொழும்பு நகரின் எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் நேற்று இரவு முதல் முழுமையாக வழமைக்குத் திரும்பியுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாள்களாக எரிபொருள் நிலையங்களில் காணப்பட்ட நீண்ட வாகன வரிசைகள் தற்போது மறைந்துள்ளன என்று கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பின் பெரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனங்கள் தடையின்றி எரிபொருளைப் பெற்று வருகின்றன.

பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐ.ஓ.சி. ஆகியன போதுமான அளவு கையிருப்புகளை சந்தைக்கு விடுத்துள்ளதால் தட்டுப்பாடு நீங்கியுள்ளது.

தேவையற்ற முறையில் எரிபொருளைச் சேமிக்க முயற்சித்த நபர்கள் மற்றும் சில ஓட்டோ சாரதிகளினால் ஏற்பட்ட குழப்ப நிலைமையை அதிகாரிகள் வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தியுள்ளனர்.

அரசின் முறையான விநியோக முகாமைத்துவம் காரணமாக கொழும்பு நகரின் எரிபொருள் விநியோகம் ஸ்திரமடைந்துள்ளது என்று அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை, கொழும்பு மற்றும் வெள்ளவத்தை உள்ளிட்ட பகுதிகளில் சமையல் எரிவாயு விநியோகமும் எவ்விதத் தடையுமின்றி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதிகாலை வேளைகளில் முன்பதிவு செய்யும் நுகர்வோருக்கு அன்றைய தினமே சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வீடுகளுக்கே விநியோகிக்கப்படுகின்றன.

விநியோகத்தில் எவ்வித பாரிய தாமதங்களும் இதுவரை பதிவாகவில்லை என வெள்ளவத்தை பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம் கொழும்பில் அத்தியாவசியப் பொருள்களின் விநியோகக் கட்டமைப்பு தற்போது வலுவான நிலையை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.