ஈரானின் மூன்றாவது போர்க்கப்பலுக்கு இந்தியா அடைக்கலம்.
ஈரானியக் கடற்படைக்குச் சொந்தமான ‘IRIS Lavan’ எனும் போர்க்கப்பலுக்கு இந்தியா அடைக்கலம் வழங்கியுள்ளது.
இதற்கமைய, 183 ஊழியர்களுடன் கூடிய இக்கப்பல் இந்தியாவின் கொச்சி துறைமுகத்தில் பாதுகாப்பாக நங்கூரமிடப்பட்டுள்ளது.
இக்கப்பல் மனிதாபிமான அடிப்படையில் அடைக்கலம் கோரியிருந்த நிலையில், இந்திய அரசு அதற்கான அனுமதியை வழங்கியுள்ளது என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சமீபத்திய நாள்களில் இந்து சமுத்திரத்தில் நடக்கும் நிகழ்வுகளுடன் தொடர்புடைய மூன்றாவது ஈரானிய கடற்படைக் கப்பல் இதுவாகும்.
இந்தியாவில் நடைபெற்ற கடற்படைப் பயிற்சிகளில் கலந்துவிட்டு திரும்பும் போது, இலங்கையின் தெற்கு கடற்கரையிலிருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் சர்வதேச கடற்பரப்பில் ஈரானிய போர்க்கப்பலான ஐ.ஆர்.ஐ.எஸ். டெனாவை அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஏவுகணை மூலம் தாக்கி மூழ்கடித்தது.
அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, இரண்டாவது ஈரானிய கப்பலான IRIS Bushehr, தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக இலங்கை கடல் எல்லைக்குள் நுழைய அனுமதி கோரியிருந்தது.
அதனைதொடர்ந்து, இலங்கை அரசு மனிதாபிமானத்தை கருத்தில் கொண்டு அதன் பணியாளர்களைக் கொழும்புத் துறைமுகத்தில் வைத்து இறக்கிவிட்டுக் கப்பலை திருகோணமலை துறைமுகத்துக்கு அனுப்பி வைத்தது.
தற்போது மூன்றாவது ஈரானியப் போர்க்கப்பலான ‘IRIS Lavan’ இந்தியாவால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.
ஒரே காலப்பகுதியில் இரு ஈரானியப் போர்க்கப்பல்களில் ஒன்று இலங்கையின் வசமும் மற்றொன்று இந்தியாவின் வசமும் இருப்பது சர்வதேச இராணுவ ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
குறிப்பாக, அமெரிக்க – ஈரான் மோதல் போக்கு நிலவும் சூழலில், தெற்காசிய நாடுகளான இலங்கையும் இந்தியாவும் மனிதாபிமான அடிப்படையில் ஈரானுக்கு உதவி வழங்கியுள்ளமை முக்கியத்துவம் பெறுகின்றது.
இந்தியா மற்றும் இலங்கையின் இந்த நகர்வுகள், பிராந்தியத்தின் இறையாண்மையை உறுதிப்படுத்துவதோடு, வல்லரசுகளின் நேரடி மோதல்களுக்கு மத்தியில் ஒரு நடுநிலைத் தன்மையைப் பேணும் முயற்சியாகவும் பார்க்கப்படுகின்றது.
