இலங்கையை விழுங்கும் உலகப் போர் நெருப்பு! – இந்திய ஊடகத்தில் சஜித் பகீர் எச்சரிக்கை.

அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான மோதல் இலங்கைக் கடற்பரப்பு வரை வியாபித்துள்ள நிலையில், இது இலங்கை போன்ற சிறிய நாடுகளுக்கு ஈடுகட்ட முடியாத பேரழிவை ஏற்படுத்தும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இந்த அபாய அறிவிப்பை விடுத்துள்ளார்.

அவரது உரையின் முக்கிய சாராம்சம் வருமாறு:-

சர்வதேச கடற்பரப்பில் ஈரானியப் போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்டமை மற்றும் மற்றொரு கப்பல் இலங்கையில் தஞ்சமடைந்துள்ளமை என்பன, இலங்கையை அறியாமலேயே இந்த உலகளாவிய மோதலுக்குள் இழுத்து விட்டுள்ளது என்று சஜித் சுட்டிக்காட்டியுள்ளார்.

“இந்தியப் பெருங்கடல் என்பது எக்காலத்திலும் ஒரு அமைதி வலயமே. அது வல்லரசுகளின் இராணுவ மோதல்களுக்கான களமாக மாறுவதை எவ்விதத்திலும் அனுமதிக்க முடியாது. ஏற்கனவே பொருளாதார ரீதியாகச் சிதைந்து போயுள்ள இலங்கை, இவ்வாறானதொரு போர் விரிவாக்கத்தைத் தாங்கும் நிலையில் இல்லை.” – என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஈரானிய மாலுமிகளைப் பொறுப்பேற்பது ‘மனிதாபிமானப் பொறுப்பு’ என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ள நிலையில், இந்தச் சூழல் இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கும் சர்வதேச உறவுகளுக்கும் பாரிய சவாலாக உருவெடுத்துள்ளது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் எச்சரித்துள்ளார்.

மத்திய கிழக்கில் பற்றி எரியும் போர் நெருப்பு இப்போது இந்தியப் பெருங்கடல் வழியாக இலங்கை மக்களின் வாழ்வாதாரத்திலும் நேரடித் தாக்கத்தைச் செலுத்தத் தொடங்கியுள்ளது. இந்தச் சீரற்ற போர்முறையை அனைத்துத் தரப்பினரும் உடனடியாக நிறுத்தி, பிராந்திய அமைதியை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் பகிரங்கக் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, ஈரானின் மூன்றாவது கப்பல் இந்தியாவின் கொச்சி துறைமுகத்தில் தஞ்சம் புகுந்துள்ளமை, இந்தப் பிராந்தியத்தின் பதற்ற நிலை எந்தளவுக்கு உச்சத்தை எட்டியுள்ளது என்பதைக் கோடிட்டுக் காட்டுகின்றது என்றும் சஜித் பிரேமதாஸ மேலும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.