பாலைதீவு படகு விபத்து: சிகிச்சைப் பலனின்றி பெண் உயிரிழப்பு பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்வு.
யாழ். பாலைதீவு அந்தோனியார் ஆலயத் திருவிழாவுக்குச் சென்றபோது இடம்பெற்ற படகு விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன் மூலம் இவ்விபத்தில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.
யாழ்ப்பாணம், குருநகர் இறங்குதுறையிலிருந்து கடந்த 6ஆம் திகதி பக்தர்களை ஏற்றிச் சென்ற படகு, கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தின்போது அன்றைய தினமே இருவர் உயிரிழந்த நிலையில், சிறுவன் ஒருவன் உள்ளிட்ட 12 பேர் மீட்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களில் கடந்த ஐந்து நாள்களாகத் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த எட்வேட் உதயகுமாரி (வயது 64) என்பவரே நேற்று செவ்வாய்க்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
