போதைப்பொருளுடன் யாழில் மூவர் சிக்கினர்! – கூரிய வாள் ஒன்றும் மீட்பு
யாழ்ப்பாணம், சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுவன் பகுதியில் போதைப்பொருள் மற்றும் வாள் என்பவற்றுடன் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்டுவன் பகுதியில் மூவர் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடுகின்றனர் என்று பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் இந்த அதிரடிச் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது பின்வரும் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
* முதலாம் சந்தேகநபரிடமிருந்து 2 கிராம் 340 மில்லி கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
* இரண்டாம் சந்தேகநபரிடமிருந்து 2 கிராம் 220 மில்லி கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
* மூன்றாம் சந்தேகநபரிடமிருந்து கூரிய வாள் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட மூவரும் தற்போது சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இவர்களுக்கும் வேறு ஏதேனும் குற்றச் செயல்களுக்கும் தொடர்புள்ளதா என்பது குறித்தும் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
