வலுசக்தி அமைச்சருக்கு எதிரான பிரேரணை மீது ஏப். 10 இல் விவாதம் – சபாநாயகர் தீர்மானம்.

வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்துக்கு விடவும், வாக்கெடுப்பு நடத்தவும் சபாநாயகர் தீர்மானித்துள்ளார்.

நாட்டில் தற்போது நிலவும் எரிசக்தி நெருக்கடிக்கு, வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடியின் முறையற்ற திட்டமிடல்களே பிரதான காரணம் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தன. அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வருவதற்கும் எதிர்க்கட்சிகள் நடவடிக்கைகளை எடுத்திருந்தன. இதையடுத்தே, அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக நேற்றுமுன்தினம் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்தப் பிரேரணையை விவாதத்துக்கு எடுப்பதற்கு சபாநாயகர் தீர்மானித்துள்ளார். இதன்படி, ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி விவாதம் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நண்பகல் 11.30 மணி தொடக்கம் மாலை 5.30 மணி வரை இடம்பெறும் விவாதத்தைத் தொடர்ந்து, வாக்கெடுப்பு நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

திசைகாட்டி அரசுக்குப் போதுமான அளவுக்கு நாடாளுமன்றப் பலம் உள்ளது. ஆதலால் இந்தப் பிரேரணை வெற்றிபெற வாய்ப்பில்லை. எனினும், ஓர் எதிர்ப்பை வெளிப்படுத்தும் நோக்கிலேயே இது கொண்டுவரப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.