சட்டவிரோத மோ. சைக்கிள் இயந்திர விற்பனை: ஒரு கோடி பெறுமதியான பொருள்கள் சிக்கின! – வர்த்தகர் ஒருவர் கைது.

வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமான முறையில் மோட்டார் சைக்கிள் இயந்திரங்களை இறக்குமதி செய்து, அவற்றை இலங்கையில் ஒன்றிணைத்து விற்பனை செய்து வந்த வர்த்தகர் ஒருவரை நுகேகொடை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான 31 மோட்டார் சைக்கிள் இயந்திரங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

நுகேகொடை குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, பல்வேறு வகைப்பட்ட 16 மோட்டார் சைக்கிள் இயந்திரங்களுடன் சந்தேகநபர் முதலில் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட வர்த்தகரிடம் முன்னெடுக்கப்பட்ட தீவிர விசாரணைகளைத் தொடர்ந்து, வெல்லம்பிட்டிய பகுதியில் உள்ள கிடங்கு ஒன்றில் மிகவும் நுணுக்கமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மேலும் 15 இயந்திரங்களைப் பொலிஸார் கண்டுபிடித்தனர்.

இந்த இயந்திரங்கள் அனைத்தும் சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, பின்னர் முழுமையான மோட்டார் சைக்கிள்களாக மாற்றப்பட்டு அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளன என்று ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.