மின்சாரம், எரிபொருள் மற்றும் சுகாதாரம் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனம்! – ஜனாதிபதியால் வர்த்தமானி வெளியீடு

இலங்கையில் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான பல முக்கிய சேவைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள இந்த வர்த்தமானியின் படி, பின்வரும் சேவைகள் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன:

மின்சார விநியோகம்: மின்சாரம் உற்பத்தி செய்தல், சேமித்தல் மற்றும் விநியோகித்தல் தொடர்பான அனைத்துச் சேவைகள்.

எரிபொருள் விநியோகம்: பெற்றோலியப் பொருள்கள் மற்றும் திரவ எரிவாயு உள்ளிட்ட எரிபொருள்களின் விநியோகம் மற்றும் போக்குவரத்துச் சேவைகள்.

சுகாதாரச் சேவைகள்: அரசாங்க வைத்தியசாலைகள், மருந்தகங்கள் மற்றும் ஏனைய மருத்துவ நிறுவனங்களால் வழங்கப்படும் பராமரிப்பு மற்றும் சிகிச்சைச் சேவைகள்.

சட்ட அதிகாரம்

பொதுப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சேவைகள் எவ்விதத் தடையுமின்றி முன்னெடுக்கப்படுவதை உறுதி செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பணிப்பகிஷ்கரிப்புக்குத் தடை

இந்த வர்த்தமானி அறிவித்தல் உடனடியாக நடைமுறைக்கு வருகின்றது. இதன் மூலம், குறித்த அத்தியாவசியத் துறைகளில் பணிபுரிவோர் எவ்விதப் பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கைகளிலோ அல்லது சேவைத் தடைகளிலோ ஈடுபட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படாதிருப்பதை உறுதி செய்வதே இந்த அதிரடி நடவடிக்கையின் நோக்கமாகும்.

Leave A Reply

Your email address will not be published.