உத்தரப் பிரதேசத்தில் பள்ளி அருகே ஏற்பட்ட புகைமூட்டம் காணமாக 26 மாணவர்களுக்கு மூச்சுத் திணறல்!

உத்தரப் பிரதேசத்தில் பள்ளி அருகே ஏற்பட்ட புகைமூட்டம் காணமாக 26 மாணவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

உத்தரப் பிரதேச மாநிலம், குஷிநகரில் உள்ள பள்ளிக்கு அருகே காய்ந்த இலைகள் மற்றும் குப்பைகளை எரித்ததால் ஏற்பட்ட நச்சுப் புகையை சுவாசித்ததில், 26 பள்ளி குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட குழந்தைகள் அனைவரும் செவர்ஹியில் உள்ள சமூக சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். சிகிச்சைக்குப் பிறகு அவர்கள் அனைவரும் வீடு திரும்பினர். இந்தச் சம்பவம் தம்குஹிராஜ் வட்டத்தில் உள்ள பள்ளிக்கு அருகில் நடந்துள்ளது.

மாவட்ட துணை ஆட்சியர் ஆகன்ஷா மிஸ்ரா மருத்துவமனைக்கு நேரில் சென்று சிகிச்சை ஏற்பாடுகளை மேற்பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட இடங்களை மாவட்ட ஆட்சியர் மகேந்திர சிங் தன்வார், காவல் கண்காணிப்பாளர் கேசவ் குமார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

“அனைத்து குழந்தைகளும் ஆரோக்கியமாக உள்ளனர், அவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். நிலைமை தற்போது கட்டுப்பாட்டில் உள்ளது,” என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இச்சம்பவத்தால் குஷிநகரில் பரபரப்பு நிலவியது.

Leave A Reply

Your email address will not be published.