கட்டுத் துப்பாக்கி வெடித்து ஒருவர் பரிதாப உயிரிழப்பு! – ஆனமடுவவில் துயரம்.

ஆனமடுவ, பரமாகந்த மலைப் பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடுவதற்காகச் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டிருந்த கட்டுத் துப்பாக்கி வெடித்ததில், 40 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் ஆனமடுவ, பரமாகந்தகம பகுதியைச் சேர்ந்த ரன்கொத்பேடி துரயலாகே தினேஷ் மங்கள அமரதாச (வயது 40) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பரமாகந்த மலையின் பின்புறப் பகுதியில் விலங்குகளை வேட்டையாடுவதற்காகத் தாம் கட்டுத் துப்பாக்கி ஒன்றை வைத்திருந்ததாகவும், அங்கு சென்று பார்த்தபோது துப்பாக்கி வெடித்து தினேஷ் என்பவர் உயிரிழந்து கிடப்பதைக் கண்டதாகவும் 42 வயதுடைய நபர் ஒருவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து, முறைப்பாடு செய்த மேற்படி நபரையே சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

உயிரிழந்த நபர் எதற்காக அந்த அடர்ந்த காட்டுப் பகுதிக்குச் சென்றார் என்பதற்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலம் மீட்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்த நீதிவான் விசாரணைகளை முன்னெடுப்பதற்குப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சட்டவிரோத வேட்டை நடவடிக்கையால் ஏற்பட்ட இந்த உயிரிழப்பு குறித்து ஆனமடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.