ரணிலின் மனைவியிடம் சி.ஐ.டி. விசாரணை: ஐக்கிய தேசியக் கட்சியினர் கடும் கண்டனம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்துக்குக் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் திடீரென வருகை தந்து, அவரது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்கிரமசிங்கவிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளமைக்கு ஐக்கிய தேசியக் கட்சி தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அதிலிருந்து தேறி வருகின்றார். இக்காலப்பகுதியில் அவரது ஆரோக்கியத்தைப் பேராசிரியர் மைத்ரி விக்கிரமசிங்கவே கவனித்து வருகின்றார்.

பேராசிரியர் மைத்ரி விக்கிரமசிங்கவும் நீண்டகாலமாக உடல்நலக் குறைவினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாறானதொரு சூழலில் சி.ஐ.டி. அதிகாரிகள் திடீரென வீட்டுக்கு வருகை தந்தமை வருத்தமளிக்கின்றது.

அரசின் மீது தற்போது சுமத்தப்பட்டு வரும் பல்வேறு குற்றச்சாட்டுகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்காகவே இவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றனவோ என்ற சந்தேகம் எழுகின்றது.

இந்த விசாரணைக்கு யாருடைய அறிவுறுத்தலின் பேரில் அதிகாரிகள் வருகை தந்தனர் என்பது குறித்து எமது கட்சி கேள்வி எழுப்புகின்றது. இருவருமே உடல்நலக் குறைவுடன் இருக்கும் போது இவ்வாறான முறையில் வாக்குமூலம் பெறுவதை அங்கீகரிக்க முடியாது.” – என்றுள்ளது.

இலண்டனில் உள்ள பல்கலைக்கழகமொன்றில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவொன்றில் கலந்துகொள்வதற்காக, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவரது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்கிரமசிங்க ஆகியோர் மேற்கொண்ட பயணத்தின் போது, அதற்கான செலவுகளுக்கு அரச நிதி முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்பட்டது என்று குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன. இது தொடர்பான முறைப்பாட்டின் அடிப்படையிலேயே குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் நேற்று அவர்களது இல்லத்துக்குச் சென்று மைத்ரி விக்கிரமசிங்கவிடம் வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.