திறைசேரி மோசடி இணையத் தாக்குதல் அல்ல; அதிகாரிகளின் அலட்சியத்தால் வந்த விளைவே – ஹர்ஷ டி சில்வா எம்.பி. கடும் சாடல்.

திறைசேரியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடியானது நுணுக்கமான இணையவழித் தாக்குதல் அல்ல என்றும், அது அதிகாரிகளின் அடிப்படை அலட்சியத்தினால் ஏற்பட்ட விளைவு என்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா விமர்சித்துள்ளார்.

பாரியளவிலான நிதிப் பரிமாற்றங்களின் போது பின்பற்றப்பட வேண்டிய முறையான நிதித் தணிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் இந்த விவகாரத்தில் முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“மில்லியன் கணக்கான ரூபாக்களைப் பரிமாற்றம் செய்வதற்கு முன்னதாக, சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்கை உறுதிப்படுத்துவதற்காக ஒரு சிறிய தொகையை அனுப்பிச் சரிபார்க்கும் வழக்கமான நடைமுறை ஏன் பின்பற்றப்படவில்லை?

பணப்பரிமாற்ற அறிவுறுத்தல்கள் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்கள் ஆகியவை மூல ஒப்பந்தங்களுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டிருக்க வேண்டும். இத்தகைய அடிப்படைப் பாதுகாப்பு நடைமுறைகள் ஏனைய இடங்களில் பொதுவாகப் பின்பற்றப்படுபவை.

பொதுமக்களின் பணம் இவ்வாறு இழக்கப்பட்டுள்ள நிலையில், இதனை வெறுமனே ‘பணம் காணாமல் போன’ ஒரு சம்பவமாகத் தட்டிக்கழிக்க முடியாது. இதற்குப் பொறுப்பான அதிகாரிகள் உரிய பொறுப்பை ஏற்க வேண்டும்.

அரச நிதியைக் கண்காணிப்பது நாடாளுமன்றத்தின் அரசமைப்பு ரீதியான பொறுப்பாகும். எனவே, இந்த விடயம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அரச நிதி பற்றிய குழு இந்தச் சம்பவம் குறித்து விரிவான விசாரணைகளை முன்னெடுக்கும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.