திறைசேரி செயலாளர் உடனடியாக பதவியில் இருந்து விலக வேண்டும்! – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் வலியுறுத்து.

அரசின் அலட்சியம் மற்றும் நிர்வாகச் சீர்கேட்டினால் திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் டொலர் நிதி இழக்கப்பட்டிருப்பது பாரதூரமான விடயமாகும். இதற்குப் பொறுப்பேற்று திறைசேரி செயலாளர் உடனடியாகப் பதவி விலக வேண்டும்” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தினார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இளம் தொழில் வல்லுநர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

2022 ஆம் ஆண்டு போராட்டத்தின் பின்னர், நாடாளுமன்ற நடவடிக்கைகளில் இளைஞர்களை உள்வாங்குவதற்காக உருவாக்கப்பட்ட துறைசார் மேற்பார்வைக் குழுக்களிலிருந்து இளைஞர்கள் நீக்கப்பட்டுள்ளமையைச் சுட்டிக்காட்டிய அவர், “ஒரே கையெழுத்தில் இளைஞர் பிரதிநிதித்துவத்தையும், நாடாளுமன்றத்தின் அதிகாரத்தையும் இந்த அரசு இல்லாது செய்துவிட்டது. இவ்வாறான சூழலில் இத்தகைய நிதி மோசடிகள் நடப்பதில் வியப்பில்லை” என்றும் சாடினார்.

காணாமல்போன 2.5 மில்லியன் டொலர் விவகாரம் குறித்து அவர் மேலும் கூறியதாவது:-

“இந்த நிதி இழப்பு அரசுக்குப் பெரிய பிரச்சினையாகத் தெரியாவிட்டாலும், இதனை ஈடுகட்ட மக்கள் மீதே மீண்டும் வரிச்சுமை சுமத்தப்படும்.

கடன் திருப்பிச் செலுத்த வேண்டிய நெருக்கடியான சூழலில், திறைசேரியில் இவ்வாறான இழப்பு ஏற்பட்டிருப்பது அரசின் அலட்சியத்தையே காட்டுகின்றது. இதில் பாரிய ஊழல் நடந்திருக்கலாம் என நாம் சந்தேகிக்கின்றோம்.

திறைசேரி செயலாளர் பதவி விலகிய பின்னரே வெளிப்படையான விசாரணை சாத்தியமாகும். நாடாளுமன்ற நிதி பற்றிய குழுவுக்குச் செயலாளரையும், மத்திய வங்கி ஆளுநரையும் அழைத்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்.” – என்றார்.

ஜனாதிபதி சைபர் பாதுகாப்புத் திட்டங்களை முன்னெடுத்தாலும், இறுதியில் நாட்டுப் பணம் திருடப்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட சஜித் பிரேமதாஸ, முறையான பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டனவா என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

கடன் தவணை செலுத்தத் தவறியமை குறித்தும் நிதி அமைச்சரும் செயலாளரும் நாட்டுக்கு உண்மையை விளக்க வேண்டும் என்றும் அவர் இதன்போது மேலும் வலியுறுத்தினார்.

Leave A Reply

Your email address will not be published.