பிக்குகளைச் சீரழிக்க அரசியல் சக்திகள் சதியாம் – ஜே.வி.பி., முன்னிலை சோசலிசக் கட்சிகள் மீது கஸ்ஸப தேரர் குற்றச்சாட்டு.
“நாட்டில் பௌத்த பிக்குகளின் ஒழுக்கத்தைச் சீரழிப்பதற்கும், அவர்களைப் போதைப்பொருள் கடத்தல் போன்ற சட்டவிரோதச் செயல்களில் சிக்க வைப்பதற்கும் சில அரசியல் சக்திகள் திட்டமிட்டுச் செயற்படுகின்றன” என்று பலாங்கொடை கஸ்ஸப தேரர் தெரிவித்தார்.
நேற்று ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார்.
பல்கலைக்கழகச் சூழலில் பிக்குகள் மாற்றமடைவது குறித்து அவர் மேலும் கூறியதாவது:-
“பிரிவெனா கல்வியில் சிறந்த ஒழுக்கத்தைப் பயிலும் பிக்குகள், பல்கலைக்கழகங்களுக்குள் நுழைந்த பின்னரே மாற்றமடைகின்றனர். அங்குள்ள மக்கள் விடுதலை முன்னணி மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சியின் மாணவர் அமைப்புகள், பிக்குகளுக்கு மார்க்சியச் சிந்தனைகளைத் தவறான முறையில் போதித்து அவர்களை அநாகரிகமான நிலைக்குத் தள்ளுகின்றன.
குஷ் உள்ளிட்ட போதைப்பொருள் பழக்கங்களுக்குப் பிக்குகள் அங்குள்ள அரசியல் பின்புலத்தாலேயே பழக்கப்படுத்தப்படுகின்றனர். இது பௌத்த சாசனத்தைச் சர்வதேச ரீதியில் அவமதிப்பதற்காகக் கையாளப்படும் ஓர் உபாயம்.
தாய்லாந்திலிருந்து குஷ் கடத்திய விவகாரத்தில் பிக்குகள் கைது செய்யப்பட்டமை குறித்து சந்தேகம் நிலவுகின்றது. கைது செய்யப்பட்டவர்கள் உண்மையான பிக்குகளா அல்லது கடத்தலுக்காகச் சீருடை அணிவிக்கப்பட்டவர்களா என்பது விசாரிக்கப்பட வேண்டும். அரசும் இடதுசாரி கட்சிகளும் தங்களுக்குப் பிடிக்காத பிக்குகளைப் பழிவாங்க இவ்வாறான விவகாரங்களைப் பின்னணியிலிருந்து இயக்குகின்றனவா என்ற பலத்த சந்தேகம் எமக்குள்ளது.
இந்த அரசு பௌத்த எதிர்ப்பு அரசு ஆகும். கத்தோலிக்க மதகுருமாருக்கு ஒரு நீதி, பிக்குகளுக்கு ஒரு நீதி என இந்த அரசு செயற்படுகின்றது.
பிக்குகள் தவறு செய்திருந்தால் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அவர்களைத் தூண்டிய அரசியல் சக்திகள் யார் என்பது கண்டறியப்பட வேண்டும்.
தேசத்தின் ஆன்மீக அடையாளமான பிக்குகளைச் சீரழிக்கும் இத்தகைய அரசியல் கலாசாரம் மிகவும் ஆபத்தானது.” – என்றார்.
