டெல்லி தனியார் மருத்துவமனையில் சாதனை: வெற்றிகரமாக நடந்த ‘இரு கை மாற்று அறுவை சிகிச்சை’.

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், மருத்துவ வரலாற்றில் மிகச் சிக்கலான “இரு கை மாற்று அறுவை சிகிச்சை” வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

வைக்கோல் வெட்டும் இயந்திரத்தில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில், ஒரு பெண் தனது இரண்டு கைகளையும் இழந்து தவித்தார். தனது அன்றாடத் தேவைகளுக்காகக் கூட மற்றவர்களைச் சார்ந்திருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட அவருக்கு, மருத்துவத் தொழில்நுட்பமும் மனிதநேயமும் கைகோர்த்துப் புதிய நம்பிக்கையை அளித்துள்ளன.

மூளைச்சாவு அடைந்த ஒருவரின் குடும்பத்தினர் முன்வந்து கைகளைத் தானம் செய்தனர். இதனைத் தொடர்ந்து, மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவினர் சுமார் 12 மணிநேரம் தொடர்ச்சியாகப் போராடி, அந்தப் பெண்ணுக்குப் புதிய கைகளைப் பொருத்தி சாதனை படைத்துள்ளனர்.

நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அந்தப் பெண்ணுக்குப் புதிய கைகள் பொருத்தப்பட்டுள்ளன. தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும், விரைவில் தனது பணிகளைத் தானே செய்யும் நிலைக்குத் திரும்புவார் என்றும் மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்த சாதனையைப் படைத்த மருத்துவக் குழுவினருக்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Leave A Reply

Your email address will not be published.