2.5 மில்லியன் டொலர் மோசடி: இடைநிறுத்தப்பட்டிருந்த உதவிப் பணிப்பாளர் இன்று உயிர்மாய்ப்பு!
இலங்கை நிதி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தில் சுமார் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் இணையவழித் திருட்டு தொடர்பில் பணிநீக்கம் செய்யப்பட்டிருந்த உதவிப் பணிப்பாளர் ஒருவர் குளியாப்பிட்டியில் உள்ள தனது இல்லத்தில் இன்று உயிரிழந்துள்ளார்.
பொலிஸ் வட்டாரங்களை மேற்கோள் காட்டி வெளியாகியுள்ள தகவல்களின்படி, இந்த மரணம் தற்கொலையாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது. இருப்பினும், இது குறித்த உத்தியோகபூர்வ உறுதிப்படுத்தல் இதுவரை வெளியாகவில்லை.
அரச நிதியை மோசடியாகப் திசைதிருப்பியதாகக் கூறப்படும் பாரிய இணையத் திருட்டுச் சம்பவம் தொடர்பில், மேற்படி அதிகாரி தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிறைவடையும் வரை அவர் தனது கடமைகளிலிருந்து இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்தார்.
மரணத்துக்கான உண்மையான காரணத்தைக் கண்டறியவும், அதனுடன் தொடர்புடைய சூழ்நிலைகளை ஆராயவும் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மத்திய வங்கியின் நிதி மாயமானது குறித்து ஏற்கனவே அரசியல் பிரமுகர்கள் கவலை வெளியிட்டிருந்த நிலையில், இந்த உயிரிழப்புச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
