வளமான நாடு – அழகான வாழ்க்கை” மக்கள் சக்தியாக ஒன்றிணையுங்கள் – ஜனாதிபதி மே தின அறைகூவல்.

இலங்கையின் உழைக்கும் மக்கள், நாடு பொருளாதார ரீதியாகப் பல வெற்றிகளை ஈட்டிக்கொண்டிருக்கும் ஒரு தீர்மானமிக்க தருணத்தில் இம்முறை தொழிலாளர் தினத்தைக் கொண்டாடுவதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் மே தினச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“2025 ஆம் ஆண்டில், 1977 ஆம் ஆண்டுக்குப் பிறகு மிகக்குறைந்த வரவு – செலவுத் திட்டப் பற்றாக்குறை பதிவாகியுள்ளதுடன், 2007 ஆம் ஆண்டுக்குப் பிறகு நாட்டின் அதிகூடிய அரச வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

பொருள்கள் மற்றும் சேவை ஏற்றுமதி வருமானம் 17 பில்லியன் டொலர்களைத் தாண்டியுள்ளது.

அமெரிக்க தீர்வை வரி விதிப்பு, ‘டித்வா’ சூறாவளி மற்றும் மத்திய கிழக்கு போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், நாட்டின் அணிசேரா வெளியுறவுக் கொள்கை மூலம் புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 1,750 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.

2016 ஜனவரி முதலாம் திகதிக்குப் பின்னர் பணியில் இணைந்த அரச ஊழியர்களுக்கும் ஓய்வூதிய உரிமை வழங்கப்பட்டுள்ளது.

‘மஹபொல’ புலமைப்பரிசில் கொடுப்பனவு 10 ஆயிரம் ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

‘டித்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வரலாற்றில் அதிகூடிய இழப்பீட்டுத் தொகையை வழங்கி, மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகின்றது.

டிஜிட்டல் பொருளாதாரம், ‘கிளீன் ஸ்ரீலங்கா’ மற்றும் ‘சமூக சக்தி’ போன்ற திட்டங்கள் மூலம் மனித வளத்தையும் உற்பத்தியையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

“வளமான நாடு – அழகான வாழ்க்கை”யைக் கட்டியெழுப்பும் கூட்டு முயற்சியில், நாட்டின் முதன்மை சக்தியான உழைக்கும் மக்கள் மனசாட்சிக்கு இணங்க இணைய வேண்டும்.” – என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.