ஆபத்தான மோட்டார் சைக்கிள் சாகசம்: 22 இளைஞர்கள் சுற்றிவளைத்துக் கைது!

மாலபே, சந்திரிகா குமாரதுங்க மாவத்தையில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் ஒன்றுக்கு அருகில், பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் மோட்டார் சைக்கிள் சாகசங்களில் ஈடுபட்ட 22 இளைஞர்கள் கடுவலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வீதியைப் பயன்படுத்துவோருக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் மோட்டார் சைக்கிள் சாகசங்கள் நடத்தப்படுவதாகக் கிடைத்த தகவலையடுத்து, பொலிஸார் நேற்று நடத்திய விசேட சோதனையின் போது இந்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த இளைஞர்கள் ‘வட்ஸ்அப்’ குழு ஒன்றின் ஊடாக ஒருங்கிணைந்து இந்தச் சாகச நிகழ்வைத் திட்டமிட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சாகசங்களுக்குப் பயன்படுத்தப்பட்ட பல மோட்டார் சைக்கிள்களைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இதில் பதிவு செய்யப்படாத இரண்டு வாகனங்களும் அடங்கும்.

கைது செய்யப்பட்ட 22 இளைஞர்களும் கடுவலைப் பிரதேசத்துக்கு வெளியே வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் அனைவரும் எதிர்வரும் மே மாதம் 5 ஆம் திகதி கடுவலை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.