ஆலய வாசலில் பாதணிகளுடன் பொலிஸார் மற்றும் கடற்படையினர் நடமாடிய விடயம் : உடனடி விசாரணை

நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தின் கோபுர வாசலில் பாதணிகளுடன் பொலிஸார் மற்றும் கடற்படையினர் நடமாடிய விடயம் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் பணிப்புரைக்கமைய சம்பந்தப்பட்ட படையினரிடம் வட பிராந்தியத்துக்கான பிரதிப் பொலிஸ்மா அதிபரினால் உடனடி விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தின் கோபுர வாசலில் பாதணிகளுடன் பொலிஸார் மற்றும் கடற்படையினர் நடமாடிய விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு நேற்று வலியுறுத்தப்பட்டிருந்தது.

இந்த விடயம் கீரிமலை மெய்கண்டார் ஆதீனம் தவத்திரு உமாபதி சிவம் அடிகளாரினால், முன்னாள் விவசாய பிரதியமைச்சரும், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட முதன்மை வேட்பாளருமான, அங்கஜன் இராமநாதனின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.

இதனை அடுத்து, இந்த செயற்பாடுகள் தொடர்பில், அங்கஜன் இராமநாதனினால் உரிய தரப்பினரின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது.

இந்த நிலையில், இந்த விடயம் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, அவதானம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு இன்று பணிப்புரை விடுத்தார்.

குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுக்குமாறும், இவ்வாறான சம்பவங்கள் இனி நடைபெறாதிருப்பதை உறுதிப்படுத்துமாறும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவினால் வட பிராந்தியத்துக்கான பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு இன்று காலை உத்தரவிடப்பட்டது.

இதனை அடுத்து, நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தின் கோபுர வாசலில் பாதணிகளுடன் பொலிஸார் மற்றும் கடற்படையினர் நடமாடிய விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட படையினரிடம் வட பிராந்தியத்துக்கான பிரதிப் பொலிஸ்மா அதிபரினால் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் தமது வருத்தத்தைத் தெரிவித்துள்ள சம்பந்தப்பட்ட படையினர், இந்த விடயம் வேண்டுமென்றே செய்யப்பட்ட ஒன்றல்ல என தெரிவித்ததுடன், இனி இது போன்ற சம்பவங்கள் இடம்பெறாது எனவும் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.