எயார்பஸ் மோசடியில் மஹிந்தவுக்கு அழைப்பாணை செவ்வாயன்று நேரில் முன்னிலையாகுமாறு உத்தரவு.

எயார்பஸ் விமானக் கொள்வனவு மோசடி தொடர்பான விசாரணைகளுக்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்வரும் 12ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆஜராகுமாறு இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பாணை விடுத்துள்ளது.

மஹிந்த ராஜபக்ஷவை மே 12 ஆம் திகதியன்று ஆணைக்குழுவில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்குமாறு கோரும் உத்தியோகபூர்வ கடிதம், நேற்று சனிக்கிழமை அவரது தங்காலை ‘கார்ல்டன்’ இல்லத்தில் வைத்து கையளிக்கப்பட்டது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுதிப்படுத்தியுள்ளது.

கடந்த வாரமே முன்னாள் ஜனாதிபதிக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது என்று ஊடகங்களில் செய்திகள் கசிந்திருந்தாலும், நேற்று சனிக்கிழமைதான் உத்தியோகபூர்வ கடிதம் அவருக்குக் கிடைத்துள்ளது.

குறிப்பாக, எயார்பஸ் வழக்கின் பிரதான சாட்சியாளராகக் கருதப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன மர்மமான முறையில் உயிரிழந்து அடுத்த நாள் இந்த அழைப்பாணை கடிதம் வந்துள்ளது.

கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பாக ராஜபக்ஷ குடும்பத்தினர் மற்றும் எதிர்த்தரப்பினர் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வரும் நிலையில், நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஒருவரை இலஞ்ச, ஊழல் தடுப்பு ஆணைக்குழு விசாரணைக்கு அழைத்துள்ளமை முக்கிய இராஜதந்திர நகர்வாகப் பார்க்கப்படுகின்றது.

நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை மஹிந்த ராஜபக்ஷ ஆணைக்குழுவில் முன்னிலையாவாரா அல்லது அவரது தரப்பில் கால அவகாசம் கோரப்படுமா என்பது குறித்த எதிர்பார்ப்பு நாடு முழுவதும் அதிகரித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.