இனப்படுகொலையை மறக்கவே மாட்டோம்! முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை ஆரம்பித்து வைத்து சுமந்திரன் தெரிவிப்பு.
“முள்ளிவாய்க்காலில் அரங்கேற்றப்பட்ட மோசமான இனப்படுகொலையை நாம் ஒருபோதும் மறக்க மாட்டோம். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மாண்ட போராளிகளையும் பொதுமக்களையும் எமது நெஞ்சில் நிறுத்தி அஞ்சலிப்போம்” என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஆரம்பமாவதை முன்னிட்டு, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மானிப்பாய் கிளையின் ஏற்பாட்டில் வலிகாமம் தெற்கு பிரதேச சபை முன்பாக நெரூர் தமிழின அழிப்பு நினைவு நிகழ்வு உணர்வுபூர்வமாக இடம்பெற்றது. இதன்போது எம்.ஏ. சுமந்திரன் பொதுச்சுடரேற்றி நினைவேந்தல் வாரத்தை ஆரம்பித்து வைத்தார்.
இறுதி யுத்தத்தின் போது உணவின்றி, ஒருவேளை கஞ்சிக்காகவும் மக்கள் பட்ட துயரங்களை உலகிற்கு உணர்த்தும் வகையில், நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டது.
நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த சுமந்திரன்,
“17 ஆண்டுகள் கடந்தாலும் முள்ளிவாய்க்கால் அவலத்தின் நினைவுகள் மாறாதவை. அந்த இறுதித் தருணங்களில் மக்கள் அனுபவித்த துன்பங்களை நினைவுகூரும் வாரமாக இதனை அனுஷ்டிக்கின்றோம்.
கஞ்சிக்கும் வழியில்லாமல் மக்கள் கஷ்டப்பட்டதை நினைவுபடுத்தவே இந்த வாரம் முழுவதும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன.” – என்றார்.
இந்நிகழ்வில் வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் தவிசாளர், உறுப்பினர்கள் மற்றும் பெருந்திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு முள்ளிவாய்க்கால் மண்ணில் வீழ்ந்த உறவுகளுக்குத் தமது அஞ்சலிகளைச் செலுத்தினர்.
