யானை தாக்கி விவசாயி பலி!
பொலன்னறுவை, மெதிரிகிரியைப் பகுதியில் நேற்று மாலை காட்டு யானை தாக்கியதில் விவசாயி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:-
மேற்படி விவசாயி தனது வயலில் வேலைகளை முடித்துவிட்டு நேற்று மாலை வீடு திரும்பிக்கொண்டிருந்துள்ளார்.
இதன்போது, திடீரென வழிமறித்த காட்டு யானை அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்தவர் 53 வயதுடைய விவசாயி என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் மூன்று பிள்ளைகளின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.
மெதிரிகிரியை மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் அண்மைக்காலமாக யானைகளின் அட்டகாசம் அதிகரித்து வரும் நிலையில், இந்த மரணச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
