தமிழ்க் கட்சிகள் ஒற்றுமைப்படாவிட்டால் மாகாண சபைகளை அரசு மிக எளிதாகக் கைப்பற்றும் – செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. எச்சரிக்கை.

“தமிழ்க் கட்சிகளுக்குள் ஒற்றுமை ஏற்படவில்லையெனில், வடக்கு – கிழக்கு மாகாண சபைகளை தேசிய மக்கள் சக்தி அரசு மிக எளிதாகக் கைப்பற்றும் அபாயம் உள்ளது.”

இவ்வாறு ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலோவின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

வவுனியாவில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அரசு தற்போது பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையில், மக்கள் ஆதரவு குறைவதற்கு முன்னரே மாகாண சபைத் தேர்தலை நடத்தி, மாகாண சபைகளைத் தன் வசப்படுத்த அரசு முயற்சிக்கும்.

தமிழ்க் கட்சிகள் எப்போதும் ஒற்றுமையாகச் செயற்பட மாட்டார்கள் என்ற விரக்தியின் காரணமாகவே மக்கள் அரசுக்கு வாக்களிக்கும் நிலை உருவாகும்.

நாங்கள் ஒற்றுமையாக இருந்து மக்கள் விரும்பும் காரியங்களைச் செய்யாவிட்டால், தேசியம் பேசுவதற்கு எமக்கு எந்த அருகதையும் இல்லாமல் போய்விடும்.

எமது போராளிகள் மற்றும் பொதுமக்களின் தியாகங்களை நாம் துச்சமாக மதிக்கின்றோம் என்ற நிலைக்குத் தள்ளப்படுவோம்.

தேர்தல் நேரத்தில் மட்டும் ஒற்றுமையாக இல்லாமல், மக்களின் அனைத்துப் பிரச்சினைகளிலும் ஒரு பலமான சக்தியாக மாற வேண்டும்.

சுயநலச் செயற்பாடுகளை விட்டுவிட்டு தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும். இல்லையெனில், தேசியம் பேசும் கட்சிகள் மக்களால் முழுமையாக நிராகரிக்கப்படும் என்பதை ஒரு எச்சரிக்கையாகச் சொல்ல விரும்புகின்றேன்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.