பாதுகாப்புச் செயலாளரை நேரில் சந்தித்து பேசினார் இந்திய விமானப்படைத் தளபதி – பாதுகாப்பு அமைச்சில் உயர்மட்ட ஆலோசனைகள்.
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய விமானப்படைத் தளபதி எயார் சீஃப் மார்ஷல் அமர் ப்ரீத் சிங், நேற்று செவ்வாய்க்கிழமை பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வுபெற்ற) சம்பத் துய்யகொந்தாவை மரியாதை நிமித்தமாகச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இந்த உயர்மட்டச் சந்திப்பின் போது, இலங்கை மற்றும் இந்திய நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. அத்துடன், பிராந்திய பாதுகாப்பு மற்றும் பரஸ்பர அக்கறை கொண்ட பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பாகவும் இருதரப்பினரும் ஆலோசனைகளை மேற்கொண்டனர்.
இருநாட்டு இராணுவ மற்றும் தூதரக உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் அமைந்த இந்தச் சந்திப்பில், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்ட உயர் மட்டப் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
