மட்டக்களப்பு பொது நூலகத்தை இன்று திறந்து வைத்தார் ஜனாதிபதி அநுரகுமார.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று மட்டக்களப்பு மாவட்டத்துக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார். இதன்போது புதிதாக நிர்மானிக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு மாநகர சபைக்கு உட்பட்ட பொது நூலகத்தையும் மக்கள் பாவனைக்காக ஜனாதிபதி திறந்து வைத்தார்.

மட்டக்களப்பு மாநகர சபையின் மேயர் கே. சிவம் பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கலந்துகொண்டு சிறப்பித்தமையுடன் நூலகத்தைப் பொதுமக்கள் பாவனைக்காகத் திறந்துவைத்தார்.

மட்டக்களப்பு மாநகர சபையின்பராமரிப்பின் கீழ் உள்ள இந்தப் பொது நூலகம், மத்திய அரசு மற்றும் மாகாண அரசு ஆகியவற்றின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட நவீன வசதிகளை உள்ளடக்கிய மூன்று மாடிக் கட்டடம் என்பது குறிப்பிடத்தக்கது.

தடைப்பட்டிருந்த இந்த நூலகத்தின் நிர்மாணப் பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்தமையைக் காண்பதில் மகிழ்ச்சியடைவதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இங்கு குறிப்பிட்டார்.

இதற்கு இணையாக, பொது நூலகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமும் ஜனாதிபதியினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

இந்தப் புதிய நூலகக் கட்டடத்தில், சிறுவர்களுக்கான விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அறிவை வழங்குவதற்காகத் தனியானதொரு பிரிவு நிறுவப்பட்டிருப்பது இதன் சிறப்பம்சமாகும்.

நாட்டில் வாசிப்பு கலாசாரம் குறைந்து வரும் இவ்வேளையில், தமிழ் மக்கள் இன்னமும் வாசிப்பதில் காட்டி வரும் ஆர்வம் பாராட்டத்தக்கது என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, நூலகம் ஒன்றைத் திறப்பது என்பது சிறைச்சாலையின் தேவையை இல்லாமல் செய்வதாகும் என்றும், இந்தப் பொது நூலகத்தின் புதிய கட்டடத்தைத் திறப்பதன் மூலம் தமிழ் மக்களின் புத்தக வாசிப்பு கலாசாரத்தை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு ஊக்கமளிப்பதாக அமையும் என்றும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு பொது நூலகத்தின் புதிய கட்டடத்தை பார்வையிட்ட ஜனாதிபதி, மாநகர சபை ஊழியர்களுடன் சுமுகமான கலந்துரையாடலிலும் ஈடுபட்டார். இதன்போது மட்டக்களப்பு மாநகர சபையின் மேயர் கே. சிவம் பாக்கியநாதன், ஜனாதிபதிக்கு நினைவுச் சின்னம் ஒன்றையும் வழங்கினார்.

இந்நிகழ்வைக் குறிக்கும் வகையில் ஜனாதிபதியால் நூலக வளாகத்தில் மரக்கன்று ஒன்றும் நடப்பட்டது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர, கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சுனில் ஹந்துன்நெத்தி, நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், ஞா.ஸ்ரீநேசன், வைத்தியர் இளையதம்பி ஸ்ரீநாத், எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, கந்தசாமி பிரபு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், பொலிஸ்மா அதிபர், மட்டக்களப்பு மாநகர சபையின் உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.