வேதாரண்யம்: கோடியக்கரையில் படகு கவிழ்ந்து விபத்து – 3 மீனவர்கள் மீட்பு, ஒருவர் மாயம்!
வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை படகுத் துறையிலிருந்து கடலுக்குள் சென்ற நான்கு மீன்வர்கள் கரை திரும்பாததால், தேடப்பட்டு வந்தவர்களில் 3 பேர் மீட்கப்பட்டனர். மாயமான ஒருவர், தொடர்ந்து தேடப்பட்டு வருகிறார்.
கோடியக்கரை படகுத் துறையிலிருந்து பாலமுருகன் என்பவருக்கு சொந்தமான கண்ணாடியிழைப்படகு ஒன்றில் அன்புச்செல்வன் உள்ளிட்ட நான்கு மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை கடலுக்குள் சென்றனர்.
திங்கள்கிழமை கரைக்கு திரும்பியிருக்க வேண்டிய இந்த மீனவர்கள் செவ்வாய்க்கிழமை காலை வரையில் கரைக்கு திரும்பவில்லை.
இதையடுத்து, சக மீனவர்கள் இரண்டு படகுகளில் சென்று, தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், வேகமாக வீசி வந்த காற்றில் படகு கவிழ்ந்து, அதில் மீனவர்கள் தவித்துக் கொண்டிருந்தனர். தேடிச் சென்ற மீனவர்கள் தவித்துக் கொண்டிருந்த, குமார் உள்ளிட்ட மூன்று மீனவர்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
பின்னர், அவர்கள் மூவரும் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடைய, படகில் இருந்து மாயமான அன்புச்செல்வனை மீனவர்கள் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
