கஹதுடுவ – தியகம வீதியில் கோர விபத்து ஆடைத்தொழிற்சாலை பஸ் வயலுக்குள் கவிழ்ந்தது; 19 பணியாளர்கள் காயங்களுடன் வைத்தியசாலையில்….

கொழும்பு, கஹதுடுவ – தியகம வீதியில் ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச்சென்ற பஸ் ஒன்று நேற்று மாலை கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி, அருகில் இருந்த வயல்வெளியொன்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் 19 பேர் காயங்களுக்குள்ளாகியுள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இவ்விபத்துச் சம்பவம் குறித்து பொலிஸார் வெளியிட்ட மேலதிக விவரங்கள் வருமாறு:-

ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற இந்த பஸ், கஹதுடுவ – தியகம வீதியில் பயணித்துக் கொண்டிருந்த போது, அதே வீதியில் எதிரே வந்த மற்றுமொரு வாகனத்துக்கு இடமளிக்க (முந்திச் செல்ல) முயன்றுள்ளது. இதன்போது எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், வீதியை விட்டு விலகி அருகில் இருந்த வயல்வெளியில் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்து நேரிட்ட உடனே அப்பகுதி மக்கள் மற்றும் பொலிஸார் இணைந்து பஸ்ஸின் உள்ளே சிக்கியிருந்த பணியாளர்களை மீட்டனர்.

காயமடைந்த 19 பேரில் 17 பேர் சிகிச்சைக்காக ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஒருவர் மேலதிக சிகிச்சைக்காகக் களுபோவில போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மற்றுமொரு பணியாளர் வேதர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

விபத்தில் காயமடைந்த எவரினதும் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என்றும், அவர்கள் அனைவரும் சிறு காயங்களுடன் தப்பியுள்ளனர் என்றும் வைத்தியசாலை வட்டாரங்களை மேற்கோள்காட்டி பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

விபத்து குறித்து கஹதுடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.