ஹொரணை முதியோர் இல்லத்தில் பெரும் துயரம் பயங்கரத் தீ விபத்தில் 9 பேர் பரிதாபச் சாவு!
களுத்துறை மாவட்டம், ஹொரணை, அங்குருவத்தோட்ட – பட்டகொட பகுதியில் அமைந்துள்ள முதியோர் இல்லம் ஒன்றில் இன்று புதன்கிழமை ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் சிக்கி ஒன்பது முதியவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் காயமடைந்த மேலும் 8 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஹொரணை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீ விபத்து ஏற்பட்ட போது இந்த முதியோர் இல்லத்தில் இருந்த மேலும் 51 பேர், பிரதேச மக்கள் மற்றும் தீயணைப்புப் படையினரின் கடும் பிரயத்தனத்துக்கு மத்தியில் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸ் அதிகாரிகள் இணைந்து விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
