காலியில் 3,000 போதை மாத்திரைகளுடன் தனியார் மருந்தக ஊழியர் ஒருவர் கைது!
காலிப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் போதை மாத்திரைகளைப் பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில், தனியார் மருந்தக ஊழியர் ஒருவரைப் பொலிஸார் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து சுமார் 3 ஆயிரம் போதை மாத்திரைகளும், ஒரு இலட்சத்து 25 ஆயிரம் ரூபா பணமும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், குறித்த பகுதியில் இந்தத் திடீர்ச் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்போதே போதை மாத்திரைகளுடன் சந்தேக நபர் பிடிபட்டார்.
பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளின்போது, கைதான நபர் அப்பகுதியிலுள்ள தனியார் மருந்தகம் ஒன்றில் பணியாற்றி வருபவர் என்பதும், மருந்தகத் தொழிலை மறைவாகப் பயன்படுத்தி இந்த சட்டவிரோத வியாபாரத்தில் ஈடுபட்டு வந்ததும் கண்டறியப்பட்டது.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகக் காலி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்குரிய ஏற்பாடுகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் காலிப் பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்துள்ளனர்.
