சுரேஷ் சலேவுக்கு பலத்த பாதுகாப்பு – அதிரடிப் படையினர் குவிப்பு.

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரைச் சுற்றியுள்ள பாதுகாப்புப் பிரிவுகள் அதிரடியாகப் பலப்படுத்தப்பட்டுள்ளன.

கொழும்பு தேசிய வைத்தியசாலை வளாகம் மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதான பொதுப் பகுதிகள் அனைத்திலும் பாதுகாப்புத் தரப்பினர் குவிக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சி.ஐ.டி. மற்றும் விசேட அதிரடிப்படையினர் களத்தில்
வைத்தியசாலையின் விசேட பாதுகாப்புப் பணிகளுக்காகக் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளும், பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும் பெருமளவில் களமிறக்கப்பட்டுள்ளனர்.

வைத்தியசாலைக்கு உள்ளேயும் வெளியேயும் சந்தேகத்திற்கிடமான நடமாட்டங்கள் குறித்துப் பலத்த சோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு, சி.ஐ.டியினரின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த சுரேஷ் சலே, தனக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகச் சாகும் வரை உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.

உணவு, நீர் மற்றும் மருந்துகளை உட்கொள்ள மறுத்ததால் அவரது உடல்நிலை மிக மோசமடைந்ததை அடுத்து, நேற்று இரவு அவர் அவசர அவசரமாகக் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவருக்கு இழைக்கப்படும் மனிதாபிமானமற்ற நடத்தைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக இன்று காலை முதல் அரசியல் கட்சிகள் மற்றும் குடும்பத்தினரால் சத்தியாக்கிரகப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வரும் பின்னணியில், இந்த பாதுகாப்புப் பலப்படுத்தல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.