கண்ணூரிலிருந்து ஜெட்டா சென்ற விமானம் அவசரமாகத் தரையிறக்கம்: 180 பயணிகள் பத்திரமாக மீட்பு!

கேரளத்தின் கண்ணூரிலிருந்து ஜெட்டாவுக்குச் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், இயந்திரக் கோளாறு காரணமாகப் புறப்பட்ட இரண்டு மணி நேரத்திற்குள் மீண்டும் கண்ணூர் விமான நிலையத்திற்கே திரும்பியதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

180-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் கண்ணூர் விமான நிலையத்திலிருந்து இன்று காலை 7.40 மணிக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. ஆனால், சுமார் இரண்டு மணி நேரப் பயணத்திற்குப் பிறகு, விமானத்தின் இயந்திரம் தொடர்பான எச்சரிக்கை விளக்கு எரிவதைக் கவனித்த விமானிகள், விமானத்தைத் திருப்ப முடிவு செய்தனர்.

விமானம் கண்ணூரில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது. பயணிகள் அனைவரும் நலமாக உள்ளனர் என வட்டாரங்கள் கூறியுள்ளன.

பின்னர், மேற்கொள்ளப்பட்ட சோதனையில், விமானத்தின் எரிபொருள் வடிகட்டியில் கோளாறு இருந்தது கண்டறியப்பட்டது.

தரையிறங்குவதற்கு முன்னதாக எரிபொருளின் அளவைக் குறைப்பதற்காக, அந்த விமானம் சிறிது நேரம் விமான நிலையத்தைச் சுற்றியே வட்டமடித்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.