செம்மணி அகழ்வுத் தளத்தை வெள்ளியன்று நேரில் பார்வையிடுகின்றார் நீதி அமைச்சர் – யாழ். நீதிவான் நீதிமன்றம் அனுமதி.

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு நடவடிக்கைகளை நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகப் பிரதானிகள் ஆகியோர் நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை நேரில் சென்று பார்வையிடவுள்ளனர்.

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் தற்போது தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இப்பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக நீதி அமைச்சர் மற்றும் அதிகாரிகள் குழுவினர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளனர்.

இதற்கான உத்தியோகபூர்வ அனுமதியைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில், காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகச் சட்டத்தரணிகளால் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று நகர்த்தல் பத்திரம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அந்த மனுவைப் பரிசீலித்த நீதிமன்றம், நீதி அமைச்சர் மற்றும் அதிகாரிகள் குழுவினர் அகழ்வுப் பணிகளை நேரில் பார்வையிடுவதற்கான அனுமதியை நேற்று பிற்பகல் வழங்கியுள்ளது.

இதற்கமைய, நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகப் பிரதானிகள் செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வாய்வுத் தளத்துக்குச் சென்று, அங்குள்ள தற்போதைய நிலவரங்கள் குறித்து நேரில் கேட்டறியவுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.