கோயில் உண்டியலில் விசித்திரக் கோரிக்கை: ரூ. 20 நோட்டால் அனந்தபூரில் பரபரப்பு!
ஆந்திரத்தில் கோயில் உண்டியலில் இருந்து கண்டெடுக்கப்பட்ட ரூ. 20 நோட்டால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள சுப்பிரமணியேஸ்வரா சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் உள்ள உண்டியல் எண்ணும் பணி அண்மையில் நடைபெற்றது. அப்போது, கோயில் ஊழியர்கள் ரூ. 20 நோட்டில் ஏதோ எழுதியிருப்பதைக் கவனித்தனர்.
உடனே அதை எடுத்து படித்தபோது அதிலிருந்த வாசகத்தைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். சுவாமி, என் மாமியார் கொடுக்கும் தொல்லைகளை என்னால் இனியும் தாங்க முடியாது. தயவுசெய்து அவர் சீக்கிரம் இறந்துவிடுவதை உறுதி செய்யுங்கள் என்கிற வாசகம் இடம்பெற்றிருந்தது.
அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அந்த வாசகத்தை மீண்டும் ஒருமுறை படித்துப் பார்த்தனர். இந்த விசித்திரமான கோரிக்கையைக் கண்டு அவர்கள் சிரித்தாலும், ரூபாய் நோட்டில் வெளிப்பட்ட கசப்புணர்வை பார்த்து அதிர்ச்சியும் அடைந்தனர். விரைவிலேயே இந்த ரூபாய் நோட்டு அங்கு பெரும் விவாதப் பொருளாக மாறியது.
அத்துடன் அதன் புகைப்படங்கள் சமூகவலைதளங்களிலும் வெளியாகி வைரலாகி வருகின்றன.
