வடக்கு ஆளுநர் லண்டன் பயணம் – பதில் ஆளுநராகக் கிழக்கு ஆளுநர்.
வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் இரண்டு வார கால அவசிய சுற்றுப் பயணமாக வெளிநாட்டுக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளார் என்று ஆளுநர் செயலக நம்பகமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எதிர்வரும் ஜூலை மாதம் 1ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 15ஆம் திகதி வரையான இரண்டு வார காலப் பகுதியில், தனது தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டு வடக்கு மாகாண ஆளுநர் லண்டன் நோக்கிப் பயணமாகவுள்ளார்.
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வெளிநாட்டில் தங்கியிருக்கும் குறித்த காலப் பகுதியில், மாகாணத்தின் நிர்வாகச் செயற்பாடுகள் மற்றும் அவசரக் கடமைகளைத் தடையின்றி முன்னெடுப்பதற்காகக் கிழக்கு மாகாண ஆளுநர் பதில் ஆளுநராக நியமிக்கப்படவுள்ளார்.
இதற்கமைய, ஜூலை முதலாம் திகதி முதல் ஜூலை 15ஆம் திகதி வரை வடக்கு மாகாணத்தின் மேலதிக நிர்வாகப் பொறுப்புகள் மற்றும் ஆளுநரின் கடமைகள் அனைத்தையும் கிழக்கு மாகாண ஆளுநரே கவனிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக வடக்கு மாகாணத்தின் உள்ளூராட்சி மன்ற நிர்வாகங்கள் மற்றும் எல்லைக் கிராமங்களின் அபிவிருத்திகள் குறித்து ஆளுநர் வேதநாயகன் பல அதிரடி நகர்வுகளை மேற்கொண்டு வந்த பின்னணியில், அவரது இந்த இரு வார கால வெளிநாட்டுப் பயணம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
