வலிகாமம் வடக்கில் சொந்த மண்ணை மீட்க ஒன்றுபட்ட மக்கள் ‘பலாலி மீள்குடியேற்ற அமைப்பு’ ஊடாக இனி நில மீட்புப் போராட்டங்கள் தீவிரம்!

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பகுதியில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள தங்களது பூர்வீகக் காணிகளை மீட்டெடுப்பதற்காக, அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து ‘பலாலி மீள்குடியேற்ற அமைப்பு’ என்ற பெயரில் புதியதொரு அமைப்பை உருவாக்கியுள்ளனர்.

இது தொடர்பாக அந்த அமைப்பின் பிரதிநிதிகள் ஊடகங்களிடம் விடுத்துள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

“வலிகாமம் வடக்கில் உயர்பாதுகாப்பு வலயம் எனக் கூறி, கடந்த 36 வருடங்களாக பலாலி, மயிலிட்டி, கட்டுவன், குரும்பசிட்டி, வயாவிளான் போன்ற பிரதேச மக்களின் குடியிருப்பு மற்றும் விவசாயக் காணிகளை இராணுவம் தன்வசம் வைத்துள்ளது. இக்காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி, கடந்த காலங்களில் தொடர்ச்சியாகப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் இதுவரை எவ்வித சாதகமான பலனும் கிடைக்கவில்லை.

எனவே, இந்த நில உரிமைப் போராட்டங்களை இன்னும் திட்டமிட்ட வடிவில் நலிவடையாது தொடர்ச்சியாகக் கொண்டு செல்வதற்கும், எமது சொந்த நிலங்களை முழுமையாக மீட்டெடுப்பதற்கும் ஏதுவாகவே ‘பலாலி மீள்குடியேற்ற அமைப்பு’ தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

இனிவரும் காலங்களில் எமது நில மீட்புக்கான அனைத்துச் செயற்றிட்டங்களும், போராட்டங்களும் இந்த அமைப்பின் ஊடாகவே முறைப்படி முன்னெடுக்கப்படும்.” – என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.