மும்பை விமான நிலையத்தில் திக் திக் நிமிடங்கள்! நேருக்கு நேர் மோதவிருந்த ஏர் இந்தியா விமானங்கள்: நூலிழையில் தப்பிய பயணிகள்!

மும்பை விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை இரவு ஏர் இந்தியா விமானம் ஒன்று தரையிறங்கிய நிலையில், அதே ஓடுபாதையில் மற்றொரு விமானம் புறப்படத் தயாரானது. கடைசி நேரத்தில் புறப்பாடு ரத்து செய்யப்பட்டதால், கோர விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

ஜூலை 7, செவ்வாய்க்கிழமை அன்று இரவு சுமார் 9.40 மணியளவில், மும்பை சர்வதேச விமான நிலையத்தின் 27-வது ஓடுபாதையில், தில்லி செல்வதற்காக ஏர் இந்தியாவின் ஏஐ 816 விமானம் நுழைந்துள்ளது.

ஆனால், மேற்கு வங்கத்தின் பாக்டோக்ராவிலிருந்து வந்து சில நிமிடங்களுக்கு முன்னதாக தரையிறங்கிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஐஎக்ஸ் 1547, அதே ஓடுபாதையில் நின்று கொண்டிருந்துள்ளது.

இந்த நிலையில், விமானக் கட்டுப்பாட்டு அறையிலிருந்து கொடுக்கப்பட்ட தகவலைத் தொடர்ந்து, ஏஐ 816 விமானத்தின் விமானி, புறப்பாட்டை ரத்து செய்துவிட்டு, மீண்டும் நிறுத்துமிடத்துக்கு விமானத்தைக் கொண்டு சென்றதால் கடைசி நேரத்தில் கோர விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஏர் இந்தியாவின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், “ விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையிடமிருந்து கிடைத்த அறிவுறுத்தலைத் தொடர்ந்து, விமானிகள் கடைசி நிமிடத்தில் புறப்பாட்டு ஓட்டத்தை ரத்து செய்தனர்” என்று ஆங்கில ஊடகத்திடம் உறுதிப்படுத்தியுள்ளார்.

எனினும், இது குறித்த கூடுதல் விவரங்களை அவர் தெரிவிக்கவில்லை.

விமானதுறையின் பாதுகாப்புத் தன்மையை கேள்விக்குறியாக்கும் வகையில், இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதுதொடர்பாக வழக்கமான நடைமுறைகளின்படி விசாரணை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.