பொலிஸாரின் அதிரடி வேட்டையில் 619 பேர் கைது! – 22 பேர் முக்கிய குற்றவாளிகள்.

பொலிஸ்மா அதிபரின் நேரடி அறிவுறுத்தலுக்கு அமைய, நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத்தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்புச் சோதனை நடவடிக்கைகளில், பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய 22 முக்கிய சந்தேகநபர்கள் உட்பட 619 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அனைத்துப் பொலிஸ் நிலையங்களையும் உள்ளடக்கிய வகையில் வலய மட்டத்திலான இந்த விசேட சோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அதற்கமைய, நேற்று முன்னெடுக்கப்பட்ட இந்த விசேட நடவடிக்கையின் போது, 27 ஆயிரத்து 198 நபர்கள் பொலிஸாரால் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதன்போது குற்றச்செயல்களுடன் நேரடியாகத் தொடர்புடைய 22 முக்கிய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பகிரங்கப் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 166 நபர்களும், நாள் குறிப்பிட்டு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 246 நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுபோதையில் வாகனம் செலுத்திய 112 சாரதிகளும் மற்றும் ஆபத்தான முறையில் கவனயீனமாக வாகனம் செலுத்திய 127 சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஏனைய போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட 4 ஆயிரத்து 454 பேருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் அமைதியைப் பேணவும், குற்றச் செயல்களை முளையிலேயே கிள்ளியெறியவும் இவ்வாறான விசேட சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.