கட்டாயத் திருமணத்திற்கு எதிர்ப்பா? கேரள இளம்பெண் மொட்டை அடித்த வீடியோவின் பின்னணியில் உள்ள உண்மை!

திருவனந்தபுரம்,

கேரளாவில் இளம்பெண் மொட்டையடித்த வீடியோவால் இணையத்தில் வதந்தி பரவியது.

இளம்பெண் மொட்டை
கேரளாவை சேர்ந்த கீர்த்தனா மேனன் என்ற இளம் பெண், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் புயலைக் கிளப்பியது . அவர் கோவிலில் அமர்ந்து தனது அடர்த்தியான கூந்தலை முழுமையாக மொட்டை அடித்துக் கொள்வதைக் காட்டும் அந்த வீடியோவில் “என் அம்மா என் திருமணத்திற்கு திட்டம் போட்டிருக்கிறார்” என்ற வாசகத்தை எழுதியிருந்தார்.

பரவிய வதந்தி
இந்த வீடியோ வெளியான சில மணி நேரங்களிலேயே, மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்று வைரலானது. நெட்டிசன்கள் பலரும், “பெற்றோரின் கட்டாயத் திருமணத்தில் இருந்து தப்பிக்கவும், வரன் பார்ப்பதைத் தடுக்கவுமே அந்தப் பெண் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளார்” என நினைத்து, அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்களைப் பகிரத் தொடங்கினர். இதனால் தேசிய ஊடகங்கள் வரை இச்சம்பவம் விவாதப் பொருளாக மாறியது.

கீர்த்தனா அளித்த நேரடி விளக்கம்
இணையத்தில் வதந்திகள் காட்டுத்தீயாய் பரவியதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பெண்ணான கீர்த்தனா தனது யூடியூப் பக்கத்தில் விளக்க வீடியோ ஒன்றை வெளியிட்டு உண்மை நிலையை தெளிவுபடுத்தியுள்ளார். தனக்கு கட்டாயத் திருமணம் எதும் நடக்கவில்லை என்றும், கல்யாண வயதில் இருக்கும் பெண்கள் மொட்டை அடித்தால் எப்படி இருக்கும் என்ற ஒரு குறும்புத்தனமான நகைச்சுவைக்காகவே அந்த வாசகத்தை வீடியோவில் சேர்த்ததாகக் கூறியுள்ளார்.

சொந்த விருப்பம்
தனது தோற்றத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை என்றும், அதற்காகத் தனது தாயின் சம்மதத்துடனேயே முடி காணிக்கை செலுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார். பெண்கள் மொட்டை அடிப்பதை சமூகம் சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், ஒரு பெண் தனது தலைமுடியை மழிப்பதால் மட்டுமே இவ்வளவு பெரிய விவாதமாக இது மாறியுள்ளது என்றும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

முடிவாக, இந்த சம்பவம் குடும்ப வற்புறுத்தலால் நடந்த போராட்டம் அல்ல, மாறாக ஒரு பெண்ணின் தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் நகைச்சுவையாகப் பகிரப்பட்ட முடிவு என்பது உறுதியாகியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.