சுரேஷ் சலேயின் மனுவுக்கு எதிரான இடைக்கால மனுக்கள் மீதான பரிசீலனை ஆகஸ்ட் 4 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

https://we.tl/t-wu82LDeMVp2LWHrf

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, தன்னைக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கைது செய்து தடுத்து வைத்துள்ளமைக்கு எதிராகத் தாக்கல் செய்துள்ள மனுவில், தங்களையும் ஒரு தரப்பாக இணைத்துக்கொண்டு கருத்துகளை முன்வைக்க அனுமதிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால மனுக்கள் மீதான பரிசீலனையை, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4ஆம் திகதிக்கு ஒத்திவைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரொஹான் அபேசூரிய முன்னிலையில் குறித்த மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

வணக்கத்துக்குரிய பெங்கமுவே நாலக தேரர் மற்றும் பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்ட 8 தரப்பினரால் இந்த இடைக்கால மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இன்றைய விசாரணையின் போது, மனுதாரர் தரப்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தனவின் சமர்ப்பணங்கள் நிறைவடைந்த பின்னரே, இந்த இடைக்கால மனுக்கள் தொடர்பான கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்று நீதியரசர் தெரிவித்தார்.

இதனடிப்படையில், இடைக்கால மனுக்களைத் தாக்கல் செய்த தரப்புச் சட்டத்தரணிகளின் இணக்கப்பாட்டுடன், அந்த மனுக்களைப் பரிசீலனைக்காக எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4 மற்றும் 6ஆம் திகதிகளில் மீண்டும் நீதிமன்றில் அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.