காலை உணவுத் திட்டத்திற்கு ‘பெருந்தலைவர் காமராஜர்’ பெயர்: தமிழ்நாடு அரசின் அதிரடி அரசாணை!
தமிழ்நாட்டில் மாணவர்கள் பள்ளிக்கு வருவதை ஊக்குவிக்கவும், அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜர் மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
பின்னர் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட முதலமைச்சர்கள் அந்தத் திட்டத்தை விரிவுபடுத்தி செயல்படுத்தினர்.
அரசாணை வெளியீடு
அதன் தொடர்ச்சியாக, கடந்த 2022 செப்டம்பர் 15ஆம் தேதி, அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு, 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்காக ‘முதலமைச்சர் காலை உணவு திட்டத்தை’ அன்றைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார்.
மேலும், வரும் செப்டம்பர் 17ஆம் தேதி முதல் இத்திட்டம் 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விரிவுபடுத்தப்படும் என தற்போதைய முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், ‘முதலமைச்சர் காலை உணவு திட்டம்’ என்ற பெயர் மாற்றப்பட்டு, இனி ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்’ என்ற பெயரில் செயல்படுத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
