நாடாளுமன்றில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கறுப்பு ஜூலையின் 43 ஆவது ஆண்டு நினைவு தினம்.

1983 ஜூலை 23 கறுப்பு ஜூலை இனக்கலவரத்தின் 43 ஆவது வருட நினைவு தினம், இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் உறுப்பினர்களால் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று வியாழக்கிழமை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது கறுப்பு ஜூலை நினைவேந்தல் தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் உரையாற்றும்போது, “இன்று ஜூலை 23 கறுப்பு ஜூலை நினைவு தினம். 43 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த நாட்டில் அரச பயங்கரவாதத்தால் நடத்தப்பட்ட இன அழிப்புக்கு இன்று வரை நீதி இல்லாமல் உள்ளது. அந்த கறுப்பு ஜூலையில் கொல்லப்பட்ட மக்களை இந்தச் சபையில் நினைவுகூருகின்றோம்.” – என்று தெரிவித்தார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இ.ஸ்ரீநாத் உரையாற்றும்போது, “இன்றைய நாள் கனத்த இதயத்துடன் பேச வேண்டிய நாள். 1983 ஜூலை 23 தமிழ் மக்களுக்கு மிகப்பெரிய கொடுமை இழைக்கப்பட்ட நாள். கடந்த கால வரலாறுகள் நம்பிக்கையீனங்களையும் விரக்திகளையும் தமிழ் மக்கள் மனங்களில் விதைத்துள்ளன. பொருளாதார, சமூக, அரசியல் ரீதியாகத் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வாகவே 1983 ஜூலை 23 இனப்படுகொலை உள்ளது. இது 2009 முள்ளிவாய்க்கால் வரை நீட்சிபெற்றிருந்தது.

இந்த இனப்படுகொலைக்கு நீதி வேண்டி நிற்கும் தமிழ்ச சமூகத்துக்கு இந்த நாட்டில் வழங்கப்பட்ட நீதி என்ன? இதற்கு நீதி வழங்கப்பட்டதாகச் சரித்திரமும் இல்லை, வழங்கப்படுவதற்கான அறிகுறிகளும் இல்லை. இன்று செம்மணியில் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அவற்றைப் பகுப்பாய்வு செய்வதற்கான சர்வதேச உதவியைப் பெற்றுக்கொள்வதற்குக் கூட அனுமதி மறுக்கப்படும் நிலைதான் உள்ளது.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.