வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் சிறை: மாநிலங்களவையில் புதிய மசோதா தாக்கல்!

‘வந்தே மாதரம்’ பாடலை அவமதிப்பதை தண்டனைக்குரிய குற்றமாக்கும் மசோதா மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தேசிய பாடலான வந்தே மாதரம் பாடலை அவமதிப்பது அல்லது அந்தப் பாடல் பாடப்படும்போது இடையூறு செய்வதை தண்டனைக்குரிய குற்றமாக்கும் தேசிய கௌரவ பாதுகாப்பு (திருத்த) மசோதாவை, மாநிலங்களவையில் மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் தாக்கல் செய்தார்.

தாக்கல் செய்யப்பட்ட புதிய மசோதாவின்படி, வந்தே மாதரம் பாடலை அவமதிப்பது அல்லது அந்தப் பாடல் பாடப்படும்போது இடையூறு செய்வது தண்டனைக்குரிய குற்றம். தேசிய கீதமான ‘ஜன கண மன’-வுக்கு உள்ள சட்டப் பாதுகாப்பை வந்தே மாதரத்துக்கும் அளிக்க மசோதா வழிவகை செய்கிறது.

பக்கிம் சந்திர சாட்டர்ஜியால் இயற்றப்பட்ட வந்தே மாதரம் பாடல், கடந்த 1875-ஆம் ஆண்டு நவம்பரில் வங்கதர்ஷன் இலக்கிய இதழில் முதல்முறையாக வெளியிடப்பட்டது. அந்தப் பாடல் வெளியிடப்பட்டு 150 ஆண்டுகளான நிலையில், தற்போது இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.

தேசியகீதமான ‘ஜன கண மன..’ பாடப்படும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் கட்டாயம் வந்தே மாதரம் பாடப்பட வேண்டும் அல்லது இசைக்கப்பட வேண்டும் என்று அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ள நிலையில், இந்த புதிய மசோதா நிறைவேறினால், தேசிய கீதம், தேசியக் கொடி, இந்திய அரசியலமைப்புக்கு வழங்கும் அதே சட்டப்பூர்வ அந்தஸ்தை, தேசிய பாடலான வந்தே மாதரமும் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மசோதா சட்டமாவதற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் ஒப்புதலைப் பெறுவதற்கு முன்பாக, நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவை உள்ளிட்ட இரு அவைகளின் ஒப்புதலையும் பெற வேண்டும்.

தேசிய கெளரவம் அவமதிப்பு தடுப்புச் சட்டத்தின்படி தேசிய கொடி, அரசமைப்புச் சட்டம், தேசிய கீதம் ஆகியவற்றை சேதப்படுத்தினால் அல்லது அவமதித்தால், 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

சட்ட பாதுகாப்பை வந்தே மாதரம் பாடலுக்கும் அளிக்கும் நோக்கில், தேசிய கெளரவம் அவமதிப்பு தடுப்பு திருத்த மசோதா 2026-ஐ, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வருகிற திங்கள்கிழமை மாநிலங்களவையில் தாக்கல் செய்யவுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.