உத்தரப் பிரதேசம்: மாணவியிடம் பாலியல் அத்துமீறல் – ஆசிரியரை செருப்பால் விளாசிய துணிச்சலான மாணவி!

உத்தரப் பிரதேசத்தில் செயல்பட்டுவரும் தனியார் பயிற்சி மையத்தில் ஆசிரியர் ஒருவர், மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மாணவி, சக ஆசிரியர்கள் முன்பு தனது காலணியைக் கொண்டு அவரை சரமாறியாக அடித்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டத்திலுள்ள சியோராஹி பகுதியில் ஐஐடி நுழைவுத் தேர்வு, நீட் போட்டித் தேர்வுக்கான பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகிவரும் மாணவர்கள் பலர் இதில் சேர்ந்து பயிற்சி பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், பயிற்சி மையத்தில் ஆசிரியர் ஒருவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக மாணவி ஒருவர் தனது வீட்டில் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து மாணவியின் பெற்றோர் பயிற்சி மையத்தில் நுழைந்து ஆசிரியரை முற்றுகையிட்டனர்.

அப்போது நடந்த விவரங்களை மற்ற ஆசிரியர்களிடம் பெற்றோர்கள் கூறியபோது, மாணவி தனது காலணியைக் கழற்றி ஆசிரியரை சரமாறியாக அடித்துள்ளார். இதனை மாணவியின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் விடியோ பதிவு செய்துள்ளனர். இந்த விடியோ சமூக வலைதளப் பக்கத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

19 விநாடிகள் கொண்ட அந்த விடியோவில், ஆசிரியரை மாணவி 9 முறை காலணியால் அடிக்கிறார். பலரும் இந்த விடியோவைப் பகிர்ந்து மாணவியின் துணிச்சலான செயலுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.