தமிழ்நாட்டில் பைக்-டாக்ஸிக்கு தடை: மீறினால் அபராதம், நடவடிக்கை! – உயர் நீதிமன்றத்தில் அரசு அதிரடி
தமிழ்நாட்டில் பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம் விதிக்கப்படும் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் சட்டப்படி உரிமம் வழங்கி ‘பைக்- டாக்ஸி’ சேவையை நடத்த அனுமதிப்பதற்கான விதிகளை உருவாக்கக் கோரிய வழக்கு, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
விசாரணையின்போது, தமிழக அரசு சார்பில் வைக்கப்பட்ட வாதங்களில், தமிழ்நாட்டில் பைக்-டாக்ஸி இயக்குவதற்கு அனுமதி கிடையாது, விதிமுறைகளை மீறினால் அபராதம் விதிக்கப்படும். பைக் – டாக்ஸி ஓட்டுநர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.
பைக்-டாக்ஸி இயக்குவது குறித்து ஒரு குழு அமைத்து அது கொடுக்கும் பரிந்துரைக்குப் பிறகே எமுடிவு எடுக்கப்படும் என்று வாதிட்டது.
இதனைக் கேட்ட நீதிபதிகள், பைக்- டாக்ஸிக்கு அனுமதி கொடுப்பதா? வேண்டாமா? என விரிவான கொள்கை முடிவு எடுக்க உயர் நீதிமன்ற கிளை அறிவுரை வழங்கியதோடு, இது குறித்து விரிவான பதில் மனு தாக்கல் செய்ய போக்குவரத்துத் துறை செயலருக்கு உத்தரவிட்டுள்ளது.
மேலும், இது குறித்து ஏன் விளம்பரப்படுத்தக் கூடாது? ஏதேனும் விபத்து நடந்தால் என்ன செய்வது? யார் பொறுப்பு? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அப்போது, பைக்-டாக்ஸி இயக்குவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. எனவே மாநில அரசு தடை செய்ய முடியாது. ஒழுங்குபடுத்தலாம் என்று மனுதாரர் தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது.
என்ன வழக்கு?
சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மதுரையைச் சோ்ந்த நவீன்குமாா் தாக்கல் செய்த பொது நல மனுவில், தமிழகத்தில் ரேப்பிடோ, ஓலா, ஊபா் போன்ற எண்ம (டிஜிட்டல்) மைய ‘பைக்-டாக்ஸி’ சேவைகள் அதிகரித்து வருகின்றன. இவை பலருக்கும் பயனளிக்கக் கூடிய வகையில் உள்ளன. ஆனால், இந்தச் சேவைகளை ஒழுங்குபடுத்துவதற்கான அரசின் திட்டமோ, விதிகளோ தமிழகத்தில் இல்லை.
ஆட்டோ, டாக்ஸிகளை போல, பைக் டாக்ஸி சேவைகள் தனித்து இயங்க முடியாது. அவை முழுமையாக சம்பந்தப்பட்ட எண்ம சேவை நிறுவனங்களைச் சாா்ந்துள்ளன. அந்த நிறுவனங்கள் மாநிலம் முழுவதும் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் தங்கள் சேவையைத் தொடா்ந்து அளித்து வருகின்றன.
இந்த நிலையில், போக்குவரத்து போலீஸாா் வாகன சோதனையின் போது பைக்- டாக்ஸி சேவையில் ஈடுபடும் ஓட்டுநா்களுக்கு அடிக்கடி அபராதம் விதிப்பது, வாகனங்களைப் பறிமுதல் செய்வது, மோட்டாா் வாகன சட்டத்தின் கீழ் குற்ற வழக்குகள் பதிவு செய்வது போன்ற நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
எனவே, பைக்- டாக்ஸிகளை ஒழுங்குபடுத்துவதற்கு ஒழுங்குமுறை அமைப்பை உருவாக்க வேண்டும். சட்டப்படி உரிமம் வழங்கி, பைக் டாக்ஸி சேவையை நடத்த அனுமதிப்பதற்கான விதிகளை உருவாக்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.
