பீகார் சிவன் கோவிலில் பயங்கர கூட்ட நெரிசல்: 7 பக்தர்கள் பரிதாப பலி!
பீகாரில் உள்ள அசோக்தாம் என்ற சிவன் கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர்.
சிவன் கோவில் கூட்ட நெரிசல்
பீகார் மாநிலம் லஹிசாராய் மாவட்டத்தில் அசோக்தாம் என்ற சிவன் கோவில் அமைந்துள்ளது.
புனித ஸ்ராவன் மாதத்தில் மூன்றாம் திங்களான இன்று அதிகாலையிலே சிவனை தரிசித்து, நீர் அபிஷேகம் காண சுமார் ஆயிரக்கணக்கான மக்கள் கோவிலில் குவிந்தனர்.
குறுகிய இடைவெளியில் 2 ரயில்கள் நிலையத்திற்கு வந்ததால், காலை 6.30 மணி முதல் 6.45 மணிக்குள் கோவிலுக்கு மாபெரும் கூட்டம் வந்துள்ளது.
கூட்ட நெரிசலின் காரணமாக ஒரு பக்கத் தடுப்பு உடைந்து, மக்கள் ஒருவர் மீது ஒருவர் விழுந்து, கூட்ட நெரிசல் அதிகரித்தது.
திடீரென்று அங்கு ஆண்கள் வரிசையில் இருந்த ஒரு மின் கம்பம் சரிந்து விழுந்தது. கம்பம் சரிந்து விழுந்தபோது, மக்கள் மீது மின்சாரக் கம்பி விழுந்துவிட்டதாக வதந்தி பரவியது.
இதனால் பெண்கள் வரிசையில் நெரிசல் அதிகரித்தது. இந்த நெரிசலில் சிக்கி 7 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் சரிந்து விழுந்தது மின்கம்பம் தான். ஆபத்தான மின்கம்பி இல்லை என மாவட்ட ஆட்சியர் சைலேந்திர குமார் விளக்கமளித்துள்ளார்.
இந்த துயர சம்பவத்திற்கு இந்திய பிரதமர் மோடி, பீகார் முதல்வர் சாம்ராட் சௌத்ரி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரண நிதி வழங்குவதாக பீகார் முதல்வர் சாம்ராட் சௌத்ரி தெரிவித்துள்ளார்.
